திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.45 திருவொற்றியூர் - திருத்தாண்டகம்
வண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு
    மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்க ளாயிரமும் வீசி நின்று
    திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
    ஒற்றியூர் மேய ஒளிவண் ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
    கடும்பிணியுஞ் சுடுதொழிலுங் கைவிட் டவே.
1
ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
    அணிகங்கைச் செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவார்
    பசுவேறி உழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் றன்னை வீழக்
    கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைக ளோத லோவா
    ஒளிதிகழு மொற்றியூர் உறைகின் றாரே.
2
வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்
    வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்
    கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர்
    கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி
உள்ளத்தை நீர்கொண்டீர் ஓத லோவா
    ஒளிதிகழு மொற்றியூ ருடைய கோவே.
3
நரையார்த்த விடையேறி நீறுபூசி
    நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட
    எம்மடிக ளும்மூர்தா னேதோ வென்ன
விரையாதே கேட்டியேல் வேற்க ணல்லாய்
    விடுங்கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்
    திருவொற்றி யூரென்றார் தீய வாறே.
4
மத்தமா களியானை யுரிவை போர்த்து
    வானகத்தார் தானகத்தா ராகி நின்று
பித்தர்தாம பேலங்கோர் பெருமை பேசிப்
    பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தம் பலருடனே கூடிப் பாடிப்
    பயின்றிருக்கு மூரேதோ பணியீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
    ஒளிதிகழு மொற்றியூர் என்கின் றாரே.
5
கடிய விடையேறிக் காள கண்டர்
    கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்
    எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்
    வருவாரை எதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடு வெண்டலையொன் றேந்தி வந்து
    திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.
6
வல்லராய் வானவர்க ளெல்லாங் கூடி
    வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லையெம் பெருமானைக் காணோ மென்ன
    எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி
    நாமிருக்கு மூர்பணியீர் அடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்
    ஒளிதிகழு மொற்றியூர் என்கின் றாரே.
7
நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்
    நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்
    கலந்து பலியிடுவேன் எங்குங் காணேன்
சலப்பாடே இனியொருநாள் காண்பே னாகிற்
    தன்னாகத் தென்னாக மொடுங்கும் வண்ணம்
உலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்
    ஒற்றியூ ருறைந்திங்கே திரிவா னையே.
8
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை
    இரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை
    பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
    உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.
9
மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச
    மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்
    திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண
    ஓங்கினவவ் வொள்ளழலார் இங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்
    செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com